பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.160க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தானும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. பொருளாதாரத்தில், தெற்காசியாவின் வலுவற்ற நாடாகப் பாகிஸ்தான் உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. பொருளாதார சீர்குலைவுக்கு அங்கு தொடர்ந்து நிலவும் அரசியல் குழப்ப நிலை முக்கியமாக பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம் காரணமாக கூறப்படுகிறது. விளை நிலங்களில் தேங்கிய நீர் குறிப்பிட்ட காலத்திற்குள் அகற்றப்படாததால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் உள்நாட்டில் உணவுப்பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கராச்சியில் ஒரு மூட்டை ( 20 கிலோ) கோதுமை மாவு கிலோ ரூ. 3200 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதாவது 1 கிலோ கோதுமை மாவு ரூ.160 ஆக விற்பனை செய்யப்படுகிது.
அப்பகுதியில் உள்ள மக்கள் உலகின் ‘மிக விலையுயர்ந்த’ கோதுமை மாவை வாங்குவதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இஸ்லாமாபாத் மற்றும் பஞ்சாபில் உள்ள பொருட்களின் விலையை விட கராச்சியில் மாவு விலை அதிகம். ஹைதராபாத்தில், 20 கிலோ எடையுள்ள மூட்டை ரூ.140 அதிகரித்து ரூ.3,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, சியால்கோட் மற்றும் குஜ்தார் ஆகிய இடங்களில், 20 கிலோ எடையுள்ள கோதுமை மாவு மூட்டையின் விலை முறையே ரூ.106, ரூ.133, ரூ.200 மற்றும் ரூ. 300 என விலை அதிகரித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.