டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், இன்று தனது 27 ஆண்டுகால பயணத்தை நிறைவு செய்து கண்ணீர் மல்க விடைபெற்றுக்கொண்டார்.
டென்னிஸ் விளையாட்டில் முன்னணி வீராங்கனையாக திகழ்பவர் செரீனா வில்லியம்ஸ். இவருக்கென்று தனி ரசிகர் பட்டளமே உண்டு. தனது அபாரமான ஆட்டத்தால் எண்ணற்ற வெற்றிகளை அள்ளிக் குவித்தவர். மகளிர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், இரட்டையர் பிரிவில் 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், 4 ஒலிம்பிக் தங்க பதக்கங்கள் உட்பட பல பட்டங்களையும் பதக்கங்களையும் தன்வசம் வைத்திருப்பவர். டென்னிஸ் விளையாட்டில் 27 ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்த செரீனா வில்லியம்ஸ் இன்றுடன் விடைபெறுகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 3வது சுற்றில் அமெரிக்க வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் ஆஸ்திரேலிய வீராங்கனையான அஜ்லா டோம்லஜானோவிக்கை எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ஆஸ்திரேலியாவின் அஜ்லா டோம்லஜனோவிக்கிடம் 7-5, 6-7, 6-1 என்ற செட் கணக்கில் செரீனா வில்லியம்ஸ் தோல்வியடைந்தது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதனால் அவர் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து வெளியேறினார்.
3வது சுற்றில் தோல்வியடைந்த செரீனா, தனது 27 ஆண்டுகால டென்னிஸ் பயணத்தை நிறைவு செய்தார். கண்ணீர் மல்க நன்றிகூறி விடைபெற்றுச் சென்ற செரீனா வில்லியம்ஸ்-க்கு ரசிகர்கள் கைதட்டி பிரியாவிடை கொடுத்து அனுப்பினர். அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடருடன் ஓய்வு பெறுவதாக செரீனா ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.