தனி கல்வி வாரியம் அமைக்கக் கோரிய வழக்கில் புதுச்சேரி அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தமிழ்நாடு அரசின் கல்வி முறையே பின்பற்றப்பட்டு வரும் நிலையில் தனி கல்வி வாரியம் அமைக்கக்கோரி ஸ்ரீதர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு என தனி பாட திட்டத்தை வகுக்க வேண்டும் என, மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து, தனி கல்வி வாரியம் அமைப்பது மாணவர்களின் நலனுக்கு சிறந்தது என்றாலும், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் தான் முடிவெடுக்க வேண்டும் என நீதிபதிகள் கூறினர். இதுதொடர்பாக, கல்வித்துறை செயலாளருக்கு நான்கு வாரங்களில் புதிய மனுவை அளிக்குமாறு மனுதாரருக்கும், 12 வாரங்களில் மனுவை பரீசீலித்து தகுந்த முடிவை எடுக்குமாறு புதுச்சேரி அரசுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.







