தமிழ்நாடு முழுவதும் ஆய்வு செய்யப்பட்டு 8 ஆயிரத்து 905 மின்மாற்றிகளை மாற்ற பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி பதில் நேரத்தின் போது, சட்டமன்ற உறுப்பினர்கள் அரவிந்த் ரமேஷ், ஜி.கே.மணி ஆகியோர் சோழிங்கநல்லூர் தொகுதியில் துணை மின் நிலையமும், பென்னகரம் தொகுதியில், உபகோட்டத்தை கோட்டமாகவும் தரம் உயர்த்த அரசு முன்வருமா என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னுரிமை அடிப்படையில், சோழிங்கநல்லூர் தொகுதியில் துணை மின் நிலையம் அமைப்பது குறித்து அரசு பரிசீலிக்கும் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், மாநிலம் முழுவதும் 176 கோட்டங்கள் செயல்பட்டு வருவதாகவும், பென்னாகரம் தொகுதியில் புதிய கோட்டங்கள் அமைப்பது தொடர்பாக முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
அதேபோல், தமிழ்நாடு முழுவதும் ஆய்வு செய்யப்பட்டு 8 ஆயிரத்து 905 மின்மாற்றிகளை மாற்ற பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதைவட கம்பிகள் இல்லாத இடங்களில் ஆய்வு செய்யப்பட்டு திட்டமதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார்.







