கொரோனா தொற்றை தடுக்க பூஸ்டர் டோஸ் வழங்குவது தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்.
சட்டப்பேரவையில் பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தொற்றை தடுக்க பூஸ்டர் டோஸ் வழங்குவது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது பேசிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை உலக சுகாதார நிறுவனம் தொடங்கியுள்ளதாகவும்,
இது தொடர்பான ஆயத்த பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளதா என்றும் கேள்வி எழுப்பினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கு பதிலளித்துப் பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பூஸ்டர் டோஸ் வழங்குவது தொடர்பாக ஒன்றிய அரசு சார்பில் வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்தக் குழு செயல்முறைகளை எதுவும் ஒன்றிய அரசுக்கு அளிக்கவில்லை எனவும் கூறினார். எனவே இந்திய அளவில் பூஸ்டர் டோஸ் வழங்கும் திட்டம் எங்கும் தொடங்கப்படவில்லை என்றும் அதுதான் தமிழ்நாட்டின் நிலை எனவும் தெரிவித்தார். அதேசமயம் மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்துவது குறித்து உலக சுகாதார நிறுவனம் அனுமதி அளித்தால் தமிழ்நாட்டில் தொடங்கப்படும் எனவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.