திருவனந்தபுரம்-சென்னை இடையே இயக்கப்படும் சென்னை மெயில் என்ற ரயிலில் உணவுகள் சுகாதாரமற்ற முறையில் கழிவறை பக்கத்தில் வைத்து விநியோகம் செய்யப்படுவதாக ரயில் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் போக்குவரத்து துறையில் ரயில்வேத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. நெடுந்தூர பயணங்களுக்கு மக்கள் அதிகமாக ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர். கட்டண குறைவு மற்றும் வசதியான போக்குவரத்தாக ரயில் பயணம் இருந்து வருகிறது.
நெடுந்தூரம் செல்லும் பயணிகளின் வசதிக்காக ரயில்களில் உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக தனியார் கம்பெனிகள் டென்டர் எடுத்து உணவை விற்பனை செய்யும் உரிமையை ரயில்வே நிர்வாகத்திடம் இருந்து பெற்று கொள்ளும்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு தினமும் சென்னை மெயில் என்ற ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் தினமும் ஏரளாமான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ரயிலில் சுகாதாரமற்ற முறையில் கழிவறை அருகில் உணவுகள் வைத்து விற்பனை செய்வதாக ரயில் பயணிகள் ரயில்வே நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுபோன்ற உணவுகளை வாங்கி உண்பதற்கு அருவருப்பாக இருப்பதாக ரயில் பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க சொல்லி ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அண்மையில் இதுபோன்ற புகார் வந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் உணவு சுகாதாரமற்ற முறையில் உணவு விநியோகிக்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளது. இதற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.







