இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் விசைப்படகுகளைப் பறிமுதல் செய்வதும், படகுகளின் மேல் தாக்குதல் நடத்துவதும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இந்த நிலையில் யாழ்ப்பாணம் காரைநகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகள் இன்று ஏலத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறையில் அடைப்பதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்குத் தமிழக அரசும், தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு இயக்கங்களும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆனால் இலங்கை கடற்படையினர் தங்களின் அத்துமீறல்களை நிறுத்தியபாடில்லை. தமிழ்நாடு அரசும் இது சம்பந்தமாக மத்திய அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றது. இந்த நிலையில் தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி விசைப்படகுகள் ஏலத்தில் விற்பனை செய்து வரும் செய்தி தமிழ மீனவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரை நகர், காங்கேசன் துறை, கிராஞ்சி, தலைமன்னார், கல்பிட்டி போன்ற இடங்களில் உள்ள தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் தற்போது ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஏலத்தில் விடப்படும் படகுகள் பல்வேறு காலங்களில் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கொழும்பிலிருந்து வந்த கடல்தொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகள் குழு காரைநகரில் ஏலத்தில் விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு விற்பனை செய்யப்படவுள்ள படகுகளைக் கடந்த ஒருவாரமாக அதிகமானோர் பார்வையிட்ட நிலையில் இன்றைய தினம் விற்பனை செய்யப்படுகிறது..
படகுகளைப் பெற விரும்புபவர்கள் ஏலத்தில் ஆரம்ப வைப்புத் தொகையாக (இலங்கை ரூபா படி) 1,000 ரூபாய் பணத்தைச் செலுத்திப் பங்கேற்க முடியும் என்பதுடன் பலரும் ஏலத்தில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.பெரும்பாலான படகுகள் சேதம் அடைந்துள்ள நிலையில் அதன் ஆரம்ப தொகையாக 10,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இது தொடர்பான அறிவிப்பை ஏற்கனவே இலங்கை அரசு அறிவித்த போதே தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு எழுப்பப்பட்டது. மேலும் இலங்கை அரசு படகுகளை விற்பனை செய்யக்கூடாது என்றும் பறிமுதல் செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களின் விசைப்படகுகள் திருப்பி தரப்பட வேண்டும் என்றும் பல தரப்பினரும் இலங்கை அரசிடம் கோரிக்கை வைத்திருந்தபோதும் , அதை ஏற்றுக் கொள்ளாமல் அந்த நாட்டு அரசு விற்பனையில் இறங்கியிருப்பது தமிழ்நாட்டு மீனவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீன்பிடி படகென்பது மீனவர்களின் முக்கியமான வாழ்வாதாரம். அவர்களை மட்டும் விடுதலை செய்துவிட்டு அவர்களின் படகுகளைக் கொடுக்காமல் இருப்பது ஏற்கனவே அவர்களின் வாழ்க்கையைப் பாதித்து வருகிறது. தற்போது அவர்களின் படகுகளை விற்பனை செய்வது அவர்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்குவதாகும் என்ற கருத்து பல தரப்பிலிருந்தும் எழுந்து வருகிறது.