பி.பி.சி. அலுவலகங்களில் வருமான வரித் துறையினரை ஏவி விட்டு, பழிவாங்க முற்படுவதா? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: மும்பை மற்றும் டெல்லியில் உள்ள பி.பி.சி. ஊடகத்தின் அலுவலகத்தில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்துவது அப்பட்டமான அதிகார முறைகேடாகும். குஜராத்தில் மோடி அரசு நிகழ்த்திய இனப்படுகொலை குறித்த ஆவணப் படத்தை வெளியிட்டதற்கு எதிர்வினையாகப் பழிவாங்கும் போக்கோடு நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்நடவடிக்கை என்பது பத்திரிக்கைச் சுதந்திரத்திற்கு விடப்பட்டிருக்கும் வெளிப்படையான மிரட்டலாகும்.
உலகப்புகழ் பெற்ற ஊடகமான பி.பி.சி.யின் ஆவணப் படத்தை நேர்மையாக எதிர்கொள்ள திராணியற்று, எதேச்சதிகாரப்போக்கோடு அவற்றிற்குத் தடைவிதித்த ஒன்றிய அரசு, தற்போது அதன் நீட்சியாக வருமான வரித் துறையினரை ஏவிவிட்டு, தனது அதிகார பலத்தைக் காண்பிக்க முற்படுவது வெட்கக்கேடானது.
வருமான வரித் துறை, மத்திய புலனாய்வுத் துறை, மத்திய அமலாக்கத் துறை என தன்னாட்சி அமைப்புகள் அனைத்தையும் கையகப்படுத்தி, அதன் மூலம் எதிர்க் கட்சிகளைச் சேர்ந்தவர்களையும், ஜனநாயகவாதிகளையும், சமூகச் செயற்பாட்டாளர்களையும், மண்ணுரிமைப் போராளிகளையும், நேர்மையான ஊடகங்களையும் அச்சுறுத்தி வரும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கொடுங்கோல் நடவடிக்கைகளுக்கு எனது வன்மையான கண்டனத்தையும், எதிர்ப்புணர்வையும் பதிவு செய்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
-ம.பவித்ரா








