மாதவிடாய் பொருட்களை இலவசமாக வழங்கி உலகின் முன்னுதாரனமாக மாறிய ஸ்காட்லாந்து

ஸ்காட்லாந்து நாட்டில் மாதவிடாய் பொருட்களை இலவசமாக வழங்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் அனைத்து உறுப்பினர்கள் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.   உலகிலேயே முதல் முறையாக, மாதவிடாய் தயாரிப்புகள் குறித்த மசோதா ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் கடந்த 2020 நவம்பரில்…

ஸ்காட்லாந்து நாட்டில் மாதவிடாய் பொருட்களை இலவசமாக வழங்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் அனைத்து உறுப்பினர்கள் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

உலகிலேயே முதல் முறையாக, மாதவிடாய் தயாரிப்புகள் குறித்த மசோதா ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் கடந்த 2020 நவம்பரில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஸ்காட்லாந்து முழுவதும் உள்ள பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பொதுக் கட்டடங்கள் அனைத்திலும் சானிடரி நாப்கின்கள் உள்ளிட்ட மாதவிடாய் சம்பந்தப்பட்ட பொருள்கள் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்றும், மாதவிடாய் சம்பந்தப்பட்ட பொருள்கள் தேவைப்படும் அனைவருக்கும் கிடைக்க வழிவகுப்பது உள்ளூர் அலுவலர்களின் கடமை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்த மசோதாவை கடந்த ஆண்டு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மோனிகா லெனான் என்ற உறுப்பினர் அறிமுகப்படுத்தினார். இந்த மசோதாவிற்கு அந்நாட்டு தொழிற்சங்கங்கள், பெண்கள் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் உள்பட அனைவரும் ஆதரவளித்தனர். இது சட்டமாக்கப்பட்ட பின்பு இது குறித்து பேசிய மோனிகா லெனான், மாதவிடாய் சம்பந்தப்பட்ட பொருள்களை வழங்கிய கடைசி நாடாக ஸ்காட்லாந்து இருக்காது என்று தெரிவித்தார்.

ஸ்காட்லாந்து நாட்டின் இந்த முடிவு மாதவிடாய் பொருள்களை இலவசமாக வழங்க முடியும் என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்தும் வகையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நடைமுறைக்கு வந்துள்ள சட்டம் குறித்து, ஸ்காட்லாந்தின் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்தில், இந்த அற்புதமான சட்டத்திற்கு வாக்களித்ததற்கு தான் பெருமிதம் கொள்வதாகவும், இது பெண்கள், சிறுமிகளுக்கான முக்கியமானக் கொள்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

பிளான் இன்டர்நேஷனல் பிரிட்டன் – 2017 இன் கணக்கெடுப்பின்படி, இங்கிலாந்து நாட்டில் 10 சிறுமிகளில் ஒருவர் மாதவிடாய் சம்பந்தப்பட்ட பொருள்களை வாங்க முடியாமல் அவதிக்குள்ளாகிறார். மேலும், 14 முதல் 21 வயது நிரம்பியவர்களில் பாதி பேர், மாதவிடாய் காலத்தின் போது அசவுகரியமாக உணர்கிறார்கள் என்றும், இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இதன் காரணமாகவே பள்ளிக்கு விடுமுறை எடுக்கின்றனர் என்றும் தெரிய வந்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு, ஸ்காட்லாந்து முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர்கள் மாதவிடாய் சம்பந்தப்பட்ட பொருட்களை இலவசமாகப் பெறலாம் என அந்நாட்டு அரசு முன்னதாக அறிவித்திருந்தது. தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டில், நூலகங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களிலும் மாதவிடாய் சம்பந்தப்பட்ட பொருட்களை இலவசமாகப் பெறும் வகையில் அந்நாட்டு அரசு நிதி ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.