கோவை அருகே பாலியல் புகாருக்கு ஆளான பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை வெள்ளளூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கணிணி அறிவியல் ஆசிரியராக பணியாற்றும் விஜய் ஆனந்த், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆன்லைன் வகுப்புகளின் போது, மாணவிகளுக்கு தனியாக வீடியோ கால் செய்து, டிஷர்ட் அணியுமாறும், ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பியும் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், நேரடி வகுப்புகளுக்கு வரும் மாணவிகளை தேவையில்லாமல் தொட்டு பாலியல் தொல்லை அளித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, ஆசிரியர் விஜய் ஆனந்த் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பள்ளியின் எதிரே மாணவ, மாணவிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட கல்வி அலுவலர் கீதா மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். இதையடுத்து ஆசிரியர் விஜய் ஆனந்தை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் கீதா உத்தரவிட்டுள்ளார்.







