ஒருதலைக் காதல் காரணமாக குன்னூர் அருகே மாணவி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் தனியார் பள்ளியில் 12ஆம்
வகுப்பு மாணவி படித்து வருகிறார். இவரை குன்னூர் கீழ் பள்ளிவாசல் பகுதியைச்
சேர்ந்த ஆஷிக் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்த மாணவி இன்று பள்ளிக்குச் செல்லும்போது பின்தொடர்ந்து சென்ற ஆஷிக் என்பவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியைக் குத்திட்டு தப்பியோடியுள்ளார். மாணவியின் அலறல் சப்தம் கேட்ட கிராம மக்கள் அந்த இளைஞரைப் பிடித்து மின் கம்பத்தில் கட்டி வைத்துள்ளனர். இதுகுறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு போலீஸாரிடம் அந்த இளைஞரை ஒப்படைத்தனர் .
தற்போது, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து குன்னூர் நகர போலீஸார் விசாரணை
நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








