பஞ்சாப் மாநிலத்தில் பாடகர் சித்து மூஸ்வாலாவை கொலை செய்ய லாரன்ஸ் பிஷ்னோய் குழு மூன்று முறை முயற்சி செய்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலை பஞ்சாப் மாநில குண்டர் தடுப்பு குழு (ஏஜிடிஎஃப்) போலீஸார் தெரிவித்தனர்.
பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கடந்த மாத இறுதியில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக 32 குண்டர்களை போலீஸார் கைது செய்தனர்.
இவர்கள் அனைவரும் லாரன்ஸ் பிஷ்ணோய் உடன் தொடர்புடையவர்கள் ஆவர். கைது செய்யப்பட்டவர்களில் 13 பேர் நேரடியாக இந்தக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர். 19 பேர் மற்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு உதவி செய்தனர் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சித்து மூஸ்வாலா படுகொலைக்கு பிறகு முதல் முறையாக போலீஸார் ஊடகத்தினரை சந்தித்து பேட்டி அளித்தனர். ஏஜிடிஎஃப் தலைவர் பிரமோத் கூறியதாவது:
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இருந்து மூஸ்வாலாவை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. லாரன்ஸ் பிஷ்ணோய் இந்தக் கொலைக்கு பின்னணியில் இருந்தார். இதை அவர் ஒப்புக் கொண்டார். அகாலி தளம் பிரமுகரின் கொலைக்கு பழிக்குப் பழியாக மூஸ்வாலா கொல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

ஆனால், அந்தப் பிரமுகரின் கொலையில் மூஸ்வாலாவுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்பது போலீஸார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதற்கு முன் ஜனவரி மாதமும் மூஸ்வாலாவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. எனினும், அவர் அப்போது தப்பியிருக்கிறார் என்று பிரமோத் தெரிவித்தார்.
-மணிகண்டன்







