திமுகவின் B டீமாக சசிகலா – தினகரன் செயல்படுவதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அம்மா மினி கிளினிக்கை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், சசிகலாவின் வருகையால் டிடிவி தினகரன் பதற்றத்தில் உள்ளதாகவும், ஏனென்றால் சசிகலா வந்தவுடன் கட்சியின் கணக்குகளை அவர் கேட்பார் என்றும் விமர்சனம் செய்தார்.
சசிகலா எத்தனை அவதாரம் எடுத்து வந்தாலும், அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என கூறிய அமைச்சர், சசிகலா மட்டுமல்லாமல், அவரை சார்ந்த யாருக்கும் அதிமுகவில் இடமில்லை என உறுதிபட கூறினார். சசிகலா மீது டிஜிபி அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட புகார் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அதிமுக நிர்வாகியாகவே சசிகலா மீது புகார் அளித்ததாக கூறினார். திமுகவின் பி டீமாக சசிகலாவும் தினகரனும் செயல்படுவதாக விமர்சித்த அவர், சசிகலா, தினகரன் ஆகியோர் ஸ்டாலினுடன் கை கோர்த்துவிட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டினார்.







