சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் 24 வயதான பட்டதாரி பெண் ஒருவர் 54 வயதான விசைத்தறி தொழிலாளியை காதலித்து கரம் பிடித்துக் கொண்டார். பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடிகள் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை அடுத்த மாட்டையம்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன். 54 வயதான இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு 24 வயதில் ஒரு மகன் உள்ளார். கிருஷ்ணன் அப்பகுதியில் விசைத்தறி தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில் கிருஷ்ணனின் பக்கத்து வீட்டை சேர்ந்த 24 வயது பெண்ணான விமலா அடிக்கடி கிருஷ்ணனின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இதில் இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனையடுத்து கிருஷ்ணனுடன் இணைந்து வாழ முடிவு செய்த விமலா இரண்டு நாட்களுக்கு முன்னர் கிருஷ்ணனுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை தொடர்ந்து இருவரும் திருவண்ணாமலையில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையில் விமலாவின் தந்தை அய்யம்பெருமாள் தனது மகளை கிருஷ்ணன் கடத்தி சென்றுவிட்டதாகவும், எனவே அவரை மீட்டு தரக்கோரியும் தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் இருவரையும் தேடி வந்தனர்.இதனையடுத்து தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி காதல் ஜோடிகள் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். காவல் நிலையத்தில் வைத்து பெண்ணின் உறவினர்கள் தங்களுடன் வந்துவிடுமாறும், நல்ல படித்த பையனை திருமணம் செய்து வைப்பதாகவும் கூறி தங்களது மகளிடம் மன்றாடினர்.
ஆனால் விமலா கிருஷ்ணனுடன் செல்வதில் உறுதியாக இருந்தார்.இதனை தொடர்ந்து இருவரும் மேஜர் என்பதால் காதல் ஜோடிகளை போலீசார் வழியனுப்பி வைத்தனர்.