பைக் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்றுவரும் பிரபல நடிகர் சாய் தரம் தேஜ், 24 நாட்களுக்குப் பிறகு முதன் முறையாக மருத்துவமனையில் இருந்து ட்வீட் செய்துள்ளார்.
பிரபல தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ். நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி மகனான இவர், வளர்ந்து வரும் இளம் நடிகராக இருந்தவர். ரே, சுப்ரமணியம் ஃபார் சேல், ஜவான், தேஜ் ஐ லவ் யூ உள்படல சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இவர் நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி விஜய துர்காவின் மகன்.
சாய் தரம் தேஜ், ஐதராபாத்தில் மாதாப்பூர் பகுதியில் உள்ள கேபிள் பாலத்தில் ஸ்வாங்கி ஸ்போர்ட்ஸ் பைக்கில் கடந்த மாதம் 10 ஆம் தேதி சென்றபோது, விபத்தில் சிக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் சுய நினைவின்றி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தோள்பட்டை எலும்பில் முறிவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாகவும் கூறப்பட்டது. அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே அவர் நடித்துள்ள, ’ரிபப்ளிக்’ படம் கடந்த 1 ஆம் தேதி ரிலீஸ் ஆகி வரவேற் பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், 24 நாட்களுக்கு பிறகு அவர் முதன்முறையாக மருத்துவமனையில் இருந்து ரசிகர்களுக்கு ட்வீட் செய்துள்ளார். அதில், என் மீதும் நான் நடித்துள்ள ’ரிபப்ளிக்’ படம் மீதும் நீங்கள் காட்டும் அன்புக்கும் பாசத்துக்கும் நன்றி என்று சொல்வது மிகச்சிறிய வார்த்தைதான். விரைவில் சந்திப்போம்’ என்று அவர் தெரிவித்துள்ளார். கூடவே தம்ஸ் அப் அடையாளத்தை காண்பிக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.








