ரஷ்யாவின் லூனா 25 தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிலவில் விழுந்து நொறுங்கியதாக அந்நாட்டின் விண்வெளி ஆராய்சி நிறுவனம் ராஸ்கோஸ்மோஸ் அறிவித்துள்ளது.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக லூனா-25 என்ற விண்கலத்தை கடந்த 10ம் தேதி ரஷ்யா விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலத்தை நாளை நிலவின் தென் துருவத்தில் தரையிறக்க திட்டமிட்டு இருந்தது. கடந்த 17ம் தேதி நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் ரஷ்ய விண்கலம் வெற்றிகரமாக நுழைந்தது. தொடர்ந்து படிப்படியாக சுற்றுப்பாதையை குறைக்கும் பணிகள் நடந்து வந்தன. ஆனால், திட்டமிட்டபடி நிலவில் இந்த விண்கலத்தை தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
திடீரென விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இறுதிக்கட்ட சுற்றுப்பாதையை குறைப்பதில் சிக்கல் ஏற்பட்ட உள்ளதாக ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ராஸ்கோஸ்மோஸ் கூறியுள்ளது. இதனால், நிலவின் சுற்றுப்பாதையிலேயே லூனா – 25 விண்கலம் சுற்றி வந்தது.
இதனிடையே, தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் முயற்சியில் ரஷ்ய விண்வெளி நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுவந்தது. இந்நிலையில், ரஷ்ய விண்வெளி நிறுவனம் ராஸ்கோஸ்மோஸ் வெளியிட்ட அறிக்கையில், லூனா 25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியதாக தெரிவித்துள்ளது.
உந்துவிசை அமைப்பில் மாற்றம் செய்த போது ஏற்பட்ட விலகல் காரணமாக மேற்பரப்பில் மோதி நொறுங்கியதாக தெரியவந்துள்ளது. அந்த விண்கலத்துடன் இழந்த தொடர்பை மீண்டும் ஏற்படுத்த விஞ்ஞானிகள் ஏற்படுத்த முயற்சி பலனளிக்கவில்லை. இதன் மூலம், 47 ஆண்டுகளுக்கு பிறகு நிலவை ஆய்வு செய்ய ரஷ்யா எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.







