ஊரக வேலைவாய்ப்பு திட்டம் – சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றம்!

சட்டசபையில் ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.

தமிழக சட்டப்பேரவையின் 4ம் நாள் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். இந்த நிலையில் சட்டசபையில் ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.

அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “தமிழகத்தின் மீது பாரபட்சத்துடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. திட்டங்களுக்கு உடனடியாக நிதி விடுவிக்காமல் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு செயல்படுகிறது. பிரதமரின் கிராம சாலை திட்டத்தில் ரூ.500 கோடி நிதி விடுவிக்கப்படாமல் உள்ளது. கிராம மக்களின் வாழ்வாதாரத்தை வேரறுக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு ரூ.1,026 கோடியை மத்திய அரசு இதுவரை விடுவிக்கவில்லை.

திட்டங்களை செயல்படுத்தும்போது மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பதை கொள்கையாக கொண்டிருக்கிறது. 100 நாள் வேலை திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயரை நீக்கி பல்வேறு உள்நோக்கங்களுடன் விபி- ஜி ராம் ஜி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்ட பெயரை மகாத்மா காந்தி பெயரிலேயே தொடர வேண்டும். 100 நாட்கள் வேலை திட்டத்தில புதிய நடைமுறையை கைவிட வேண்டும்.

பழைய நடைமுறையே தொடர வேண்டும். ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் மாநில செயல்திறன்படி நிதி ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும். 100 நாட்கள் வேலையை உறுதி செய்து ஒவ்வொரு ஆண்டும் 65 லட்சம் குடும்பங்கள் பயன்பெற்றன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு நிதிப் பங்களிப்பு போல புதிய திட்டம் திருத்தப்பட வேண்டும் என்று கூறினார். இதையடுத்து ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.