கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பினராயி விஜயன் முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
கேரள சட்டசபை கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. அப்போது கூட்டத் தொடரில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் எம்எல்ஏவுமான எம்.எம்.மணி, “அந்தப் சிறந்த பெண் (எம்எல்ஏ கே.கே.ரெமா) விதவையானார். அது அவரது விதி. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல” என்றார்.
இந்தக் கருத்தால் நேற்றே சட்டசபையில் சலசலப்பு ஏற்பட்டது. எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இந்நிலையில், சட்டசபையில் இரண்டாவது நாளாக இன்றும் இந்த விவகாரத்தை முன்வைத்து அமளி ஏற்பட்டது.
கே.கே.ரெமாவின் கணவர் புரட்சிகர சோஷலிச கட்சியின் நிறுவனர் டி.பி.சந்திரசேகரன் கடந்த 2012ஆம் ஆண்டு கொல்லப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிலருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், அக்கட்சியின் எம்எல்ஏவான எம்.எம்.மணி இவ்வாறு தெரிவித்தது சர்ச்சைக்குள்ளானது. அவரது கருத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆன்னி ராஜன் கூறுகையில், “இதுபோன்ற கருத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். இது அவருடைய தவறான எண்ண ஓட்டத்தையே வெளிப்படுத்துகிறது” என்றார்.
எம்.பி. பினோஷ் விஸ்வமும் அவரது கருத்தை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
எனினும், நான் தவறாக எதுவும் கூறவில்லை. நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று எம்.எம்.மணி கூறியது குறிப்பிடத்தக்கது.







