மத உணர்வுகளை தூண்டும்விதமாக கருத்துக்களை பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் முகமது சுபைருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவின் பெங்களூருவைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியும், ஆல்ட் நியூஸ் நிறுவனத்தின் இணை நிறுவனருமான முகம்மது சுபைர், மத உணர்வை புண்படுத்தும் நோக்கில் ட்விட்டரில் பதிவிட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஜூன் 27ம் தேதி டெல்லி போலீசாரால் முகம்மது சுபைர் கைது செய்யப்பட்டார்.
மத உணர்வை புண்படுத்தியது தொடர்பாக உத்தரப்பிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்திலும் அவருக்கு எதிராக ஒரு வழக்கு பதியப்பட்டது. லக்கிம்பூர் கெரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், இந்த வழக்கில் தமக்கு ஜாமின் வழங்கக் கோரியும் முகம்மது சுபைர் சீதாபூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை சீதாபூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, அவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
உச்சநீதிமன்றம் முகம்மது சுபைருக்கு 5 நாட்களுக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து உத்தரவிட்டது. எனினும், இந்த நிபந்தனை ஜாமீன், சீதாபூர் மாவட்ட வழக்குக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தீர்ப்பில் தெரிவித்திருந்தது.
இதனிடையே, உத்தரப்பிரதேசத்தின் மொகம்மதி காவல் நிலையத்தில், முகம்மது சுபைருக்கு எதிராக ஆஷிஷ் கடியார் என்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் புகார் அளித்திருந்தார். அவர் தனது புகாரில், தனது ஆல்ட் நியூஸ் சேனல் மூலம் சமூகத்தை முகம்மது சுபைர் தவறாக வழிநடத்துவதாகக் குற்றம் சாட்டி இருந்தார். இந்த வழக்கில், பத்திரிகையாளர் முகம்மது சுபைரை 14 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் பத்திரிக்கையாளர் முகமது சுபைர் கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து பத்திரிக்கையாளர் முகமது சுபைருக்கு டெல்லி நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில் பத்திரிக்கையாளர் முகமது சுபைருக்கு நீதிமன்ற வைப்புத்தொகையாக ரூ.50,000 செலுத்த வேண்டும் என்றும், நீதிமன்ற உத்தரவு இல்லாமல் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது என்றும் நிபந்தனைகளை கூறியுள்ளது.








