ஆர்எஸ்எஸ் ஊர்வலம் தொடர்பான வழக்கு வரும் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நவம்பர் 6 ம் தேதியன்று ஊர்வலத்தை நடத்த உத்தரவிட்டதுடன், அதற்கான நிபந்தனைகளை விதித்து, அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், அனுமதி வழங்கவில்லை என காவல்துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஆர்எஸ்எஸ் தரப்பில், “கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற எந்த இடத்திலும் அனுமதி வழங்கவில்லை. அனுமதி அளித்த உத்தரவை செயல்படுத்தாமல் உளவுத்துறை அறிக்கையை காட்டி தமிழக அரசு தப்பிக்க பார்க்கிறது. வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவை அவமதித்துள்ளது” என வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி மற்ற இடங்களில் ஏன் அனுமதி வழங்கவில்லை என காவல்துறை தரப்பிற்கு கேள்வி எழுப்பினார். காவல்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, “ஆர்எஸ்எஸ் விண்ணப்பங்களில் அனுமதி வேண்டுமென செப்டம்பர் 30ம் தேதி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு பிறகு வேறு மாதிரியான சூழல் ஏற்பட்டுள்ளது. அதை கருத்தில் கொண்டே 3 இடங்களில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. 23 இடங்களில் உள்ளரங்கு கூட்டமாக நடத்திக்கொள்வதாக இருந்தால் அவற்றிற்கு அனுமதி வழங்க தயாராக உள்ளோம்” எனத் தெரிவித்தார். ஆனால் மீதமுள்ள 24 இடங்களில் அனுமதி வழங்க இயலாது என்றும் தெரிவித்தார்.
இதுமட்டுமல்லாமல் பல இடங்களில் கனமழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதால் வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டி உள்ளதாகவும் தெரிவித்தார்.
கோவையை தவிர மற்ற இடங்களில் அனுமதி அளிக்க பரிசீலிக்கலாமே என நீதிபதி கேள்வி எழுப்பியபோது, மக்களின் பாதுகாப்பே முக்கியம். ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளின் வீடுகளுக்கே பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்” வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ. தங்களது உயிரை துச்சமென நினைத்தும், நேரத்தையும் தியாகம் செய்தும் தகவல்களை சேகரிக்கும் உளவுத்துறையினர் தரும் தகவல்களை எப்படி யூகம் அல்லது அனுமானம் என சொல்ல முடியும் எனவும் ஆர்.எஸ்.எஸ். தரப்பிற்கு அவர் கேள்வி எழுப்பினார். அதன்பின்னர் உளவுத்துறையின் அறிக்கையையும் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தாக்கல் செய்தார்.
ஆனால் ஆர்.எஸ்.எஸ். தரப்பில் உள்ளரங்கு கூட்டமாக நடத்த முடியாது எனவும், பேரணிக்குதான் காவல்துறை அனுமதி வழங்க வேண்டுமெனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், உளவுத்துறை அறிக்கையை பார்த்த பிறகு மீதமுள்ள 47 இடங்களில் அனுமதி வழங்க வேண்டுமா வேண்டாமா என உத்தரவு பிறப்பிப்பதாக கூறி, வழக்கின் விசாரணையை வரும் 4ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.







