பஞ்சாப்பில் எரிபொருள் நிரப்பும்போது 2,000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்வதாக எரிபொருள் நிலையங்கள் அறிவித்துள்ளதால், அங்கு ரூ.2,000 நோட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் ரூ.2000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. அத்தகைய நோட்டுகள் செப்டம்பா் 30-ம் தேதி வரை செல்லுபடியாகும் என்றும், அதுவரை அவற்றை வழக்கமான பணப் பரிவா்த்தனையில் தொடா்ந்து பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பொதுமக்கள் வங்கிகளுக்கு சென்று 2,000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதை விட, பெட்ரோல் பங்குகளில், உணவகங்களில், கடைகள் உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்தி கொள்வது நேரத்தை மிச்சப்படுத்தும் என்பது பலரின் எண்ணமாக உள்ளது. இதனால், பல நிறுவனங்களில், கடைகளில் தற்போது சில்லறைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரசுத்துறைகளில் தற்போது, ரயில்வே உள்ளிட்ட சில துறைகள் மட்டுமே 2000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்கின்றன.
இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள எரிபொருள் நிலையங்களில், ரூ.2000 அளவுக்கு எரிபொருள் நிரப்பினால், 2,000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்வதாக அறிவிப்பு வெளியானது. இதனால், கடந்த ஒரு சில நாள்களாக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை 10% முதல் 40% வரை குறைந்திருப்பதாகவும், தற்போது எரிபொருள் விற்பனையில் 90% ரொக்கமாகவே பெறப்பட்டு வருவதாகவும், குறிப்பாக 2000 ரூபாய் நோட்டுகள் அதிகமாக வருவதாகவும் பஞ்சாப் பெட்ரோலிய பொருள்கள் விநியோகஸ்தர்கள் கழகம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நிலைமை நீடித்தால், வருமான வரித்துறையிடமிருந்து விநியோகஸ்தர்கள் கழகத்திற்கு நிச்சயம் சிக்கல் வரலாம் எனவும், இதனால் ரூ.2000 நோட்டுகளை பெட்ரோல் நிலையங்களில் மாற்றுக்கொள்ளும் அறிவிப்பு விரைவில் திரும்ப பெற வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.