2014 முதல் 2023 வரை பொதுத்துறை வங்கிகளால் தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகை ரூ.14.5 லட்சம் கோடி என கனிமொழி எம்.பி. கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் பதிலளித்துள்ளார்.
திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற திமுக துணைத் தலைவருமான கனிமொழி மக்களவையில் நேற்று எழுத்துபூர்வமான சில கேள்விகளை எழுப்பினார். 
- 2014 முதல் ஆண்டுவாரியாக தள்ளுபடி செய்யப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் தொகை தொடர்பான விவரங்கள் என்ன?
- அவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்டு பின் மீட்கப்பட்ட கார்ப்பரேட் கடன்களின் விவரங்கள் என்ன?
- அதிகபட்ச தள்ளுபடி பெற்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் விவரங்கள் மற்றும் அந்த கடனை தள்ளுபடி செய்த வங்கியின் விவரங்கள் என்ன?
இவ்வாறு கேள்விகளை எழுப்பியிருந்தார். இந்தக் கேள்விகளுக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் காரத் எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 
- இந்திய ரிசர்வ் வங்கி கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்ட விவரங்கள் தங்களால் பராமரிக்கப்படுவதில்லை என்று தெரிவித்துள்ளது. அதேநேரம் SCB எனப்படும் பட்டியலிடப்பட்ட வர்த்தக வங்கிகள், பெரு நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு ஆண்டுவாரியாக தள்ளுபடி செய்யப்பட்ட கடன் விவரங்களை ரிசர்வ் வங்கியிடம் தெரிவித்துள்ளன.
- அதன்படி 2014-15-ம் நிதியாண்டில் பெரு நிறுவனங்கள் மற்றும் சேவை நிறுவனங்களுக்கு ரிட்டர்ன் ஆஃப் செய்யப்பட்ட கடன் தொகை ரூ.18,178 கோடி. அதே நிதியாண்டில் மொத்த தள்ளுபடி கடன் தொகை ரூ.58,786 கோடி ரூபாய்.
- 2015-16 நிதியாண்டில் ரூ.70,413 கோடி
- 2016-17 நிதியாண்டில் ரூ.1,08,373 கோடி
- 2017-18 நிதியாண்டில் ரூ.1,61,328 கோடி
- 2018-19 நிதியாண்டில் ரூ.2,36,265 கோடி
- 2019-20 நிதியாண்டில் ரூ.2,34,170 கோடி
- 2020-21 நிதியாண்டில் ரூ.2,02,781 கோடி
- 2021-22 நிதியாண்டில் ரூ.1,74,966 கோடி
- 2022-23 நிதியாண்டில் ரூ.2,09,144 கோடி தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகைகளாகும்.
- ஆக மொத்தம் ரூ.14,56,226 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் பெரு நிறுவனங்கள் மற்றும் சேவை நிறுவனங்களுக்காக தள்ளுபடி செய்யப்பட்ட தொகை ரூ.7,40,968 கோடி ஆகும்.
- இவற்றில் SCB எனப்படும் பட்டியலிடப்பட்ட வர்த்தக வங்கிகள் 2014 ஏப்ரல் மாதத்தில் இருந்து 2023 மார்ச் மாதம் வரை மொத்தம் ரூ.2,04,668 கோடி மதிப்புக்கு தள்ளுபடி கடன்களை மீட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து மீட்ட தொகையும் இதில் அடக்கம்.
இவ்வாறு பதிலளித்துள்ளார். எந்தெந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எந்தெந்த வங்கிகள் எவ்வளவு கடன் தொகை தள்ளுபடி செய்திருக்கின்றன என்ற விவரம் நிதித்துறை இணையமைச்சரின் பதிலில் இடம்பெறவில்லை.







