சென்னை, நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் சாலையில் சென்று கொண்டிருந்த ராயல் என்பீல்டு இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில், நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் சாலையில் இன்று காலை வழக்கம் போல் போக்குவரத்து சென்று கொண்டிருந்தது. அப்போது, 24 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் வள்ளூவர் கோட்டம் சாலையில், தனது ராயல் என்பீல்டு என்ற இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக சென்று கொண்டிருந்த அவர், பாதில் வழியில் செல்லும் போது, இருசக்கர வாகனத்தில் இருந்து புகை வந்ததும் கீழே இறங்கியுள்ளார். அப்போது, இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் என்ன செய்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தார். உடனே அருகில் உள்ள உணவகத்தில் இருந்து தண்ணீர் கொண்டுவரப்பட்டு தீயை அணைத்தனர்.
விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் பற்றிய தீ மளமளவென எரிந்ததால், அந்த வழியாக சென்றவர்கள் நின்று பார்த்து சென்றனர். இதனால் வள்ளுவர் கோட்டம் சாலை சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. இந்த தீ விபத்தில் அந்த இளைஞர் உடனடியாக வாகனத்தில் இருந்து இறங்கியதால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
– இரா.நம்பிராஜன்








