பாணாவரத்தில் ரவுடி சரத்குமாா் கை, கால்கள் துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அடுத்த புதூர் மலைமேடு கிராமத்தில் உள்ள மயானம் அருகே கை, கால்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் 30 வயது மதிக்கத்தக்க நபர் படுகொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாணாவரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி தீபா, ஐபிஎஸ் சத்யன் , டிஎஸ்பி பிரபு ஆகியோர் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரனையில், பாணாவரம் அடுத்த கூத்தம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த அசோக்குமாா் என்பவரின் மகன் ரெளடி சரத்குமாா் (22) என்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே இவர் பல வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளதால் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளாரா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என மாவட்ட கண்காணிப்பாளா் தீபன்சத்யன் தலைமையிலான தனிப்படை போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-ம.பவித்ரா









