கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தில் கருத்தொற்றுமை ஏற்படுத்த சிறப்பு பணிக்குழுவை அமைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டத்திற்கான வரைவு திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டு விட்டதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இத்திட்டம் செயல்வடிவம் பெற பல தடைகளை கடக்க வேண்டும் என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
நதிகள் இணைப்பு திட்டத்தை கோதாவரியில் இருந்து தொடங்கலாம் என்ற மத்திய அரசின் கருத்துக்கு தெலங்கானா மாநிலம் எதிர்ப்பு தெரிவித்திருப்பது, இந்த திட்டத்திற்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவு எனக்கூறியுள்ளார். தெலுங்கானத்தைப் போலவே வேறு சில மாநிலங்களும் அரசியல் காரணங்களுக்காக இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடும் எனக்கூறியுள்ள அவர், கோதவரி – காவிரி இணைப்பை ஒருங்கிணைக்கும் தேசிய நீர் மேம்பாட்டு முகமைக்கு ஏராளமான பிற பணிகள் இருப்பதால், இப்பணியை திறம்பட மேற்கொள்ள இயலாது என குறிப்பிட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
எனவே, கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டத்துடன் தொடர்புடைய 5 மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கருத்தொற்றுமை ஏற்படுத்துவதற்காக, மத்திய அரசு சிறப்பு பணிக்குழுவை உடனடியாக உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், தமிழ்நாடு அரசும் அதன் தொடர்புகளை பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் பேசி இணைப்புத் திட்டம் பற்றி கருத்தொற்றுமையை உருவாக்க வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.