ரிதன்யா வழக்கு – கணவர் குடும்பத்தினரின் ஜாமின் மனு தள்ளுபடி

திருப்பூர் ரிதன்யா வழக்கில் கணவர் குடும்பத்தாரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவர் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். (ஈரோடு இடைத்தேர்தலில் இந்து திராவிட மக்கள் கட்சியின் சார்பில் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்டு உள்ளார்.) இவரது மகள் ரிதன்யா (வயது 27). இவருக்கும் திருப்பூர்  வேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கவின் குமார் (வயது 28) (திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணனின் மூத்த மகன் வழி பேரன்) என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த சூழலில், கடந்த ஜூன் 28ம் தேதி தனது காரில் கணவர் வீட்டிலிருந்து கிளம்பிய ரிதன்யா மொண்டி பாளையம் கோயிலுக்கு செல்லும் வழியில் சாலையோரம் காரை நிறுத்தினார். பின்னர், எனது இந்த முடிவுக்கு கணவர், மாமனார், மாமியார்தான் காரணம் என தனது தந்தைக்கு ஆடியோ மெசேஜ் அனுப்பிவிட்டு, தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மாத்திரையை உட்கொண்டு காரிலேயே உயிரிழந்தார். காரினுள் ரிதன்யா மயங்கி கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் சேயூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ரிதன்யாவின் உடலை கைப்பற்றி அவிநாசி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். வரதட்சனை கொடுமையால்தான் தன் மகள் உயிரிழந்ததாக ரிதன்யாவின் பெற்றோர் குற்றம்சாட்டினர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோரை கைது செய்தனர்.

இதற்கிடையே, ரிதன்யாவின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஜாமின் கோரி திருப்பூர், முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. ஜாமின் வழங்கக்கக்கூடாது என ரிதன்யாவின் பெற்றோர் மனுதாக்கல் செய்தனர். அப்போது, ரிதன்யாவின் கணவர் குடும்பத்தினரின் மனுவை விசாரணை செய்த நீதிபதி குணசேகரன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.