பிரட்டன் பிரதமருக்கான இறுதிச் சுற்றுக்கு ரிஷி சுனக்கும், லிஸ் ட்ரூசும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பிரிட்டனின் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவியிலிருந்தும், பிரதமர் பதவியிலிருந்தும் போரிஸ் ஜான்சன் விலகியதை அடுத்து கட்சியின் புதிய தலைவர் மற்றும் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான போட்டி கடந்த 13ம் தேதி துவங்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், இங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் ட்ரூஸ், பென்னி மோர்டான்ட், சுயெல்லா பிரேவர்மேன், பாகிஸ்தானைப் பூர்விகமாக கொண்ட முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் உள்ளிட்ட 8 பேர் பிரதமருக்கான தேர்தலில் பங்கேற்றனர்.
குறைந்தது 20 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பவர்கள் மட்டுமே பிரதமர் தேர்தலில் போட்டியிட முடியும். முதல் சுற்றில் 30 எம்பிக்களுக்கு குறைவாக வாக்குகள் பெறுபவர்கள் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.
ஒவ்வொரு சுற்றிலும் குறைவான வாக்குகளை பெறுபவர்கள் போட்டியில் நீக்கப்பட்டு இறுதியாக 2 போட்டியாளர்கள் எஞ்சும் வரை எம்பிக்கள் வாக்கெடுப்புகள் நடைபெறும்.
அந்த வகையில் இதுவரை நடைபெற்ற 5 சுற்று போட்டியில், 6 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இன்று நடைபெற்ற 5ம் சுற்று போட்டியில், 105 வாக்குகள் பெற்ற பென்னி மோர்டான்ட் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இதையடுத்து, 137 எம்பிக்களின் ஆதரவை பெற்றுள்ள ரிஷி சுனக்கும், 113 வாக்குகளைப் பெற்றுள்ள லிஸ் ட்ரூசும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
இதையடுத்து, இருவரில் ஒருவரை தேர்வு செய்வதற்கான தேர்தலில், நாடு முழுவதும் உள்ள சுமார் 1.6 லட்சம் கன்செர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இதன் காரணமாக, அடுத்த சில வாரங்களுக்கு ரிஷி சுனக்கும், லிஸ் ட்ரூசும் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து கட்சி உறுப்பினர்களிடம் ஆதரவு திரட்ட உள்ளனர்.
இந்த தேர்தலில், கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் தபால் மூலம் அல்லது ஆன்லைன் மூலம் வாக்களிக்க முடியும்.
பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட்டு செப்டம்பர் 5ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.
இதையடுத்து, தேர்வு செய்யப்படுபவர் கட்சியின் தலைவராகவும், நாட்டின் பிரதமராகவும் பதவியேற்பார்.
இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான தேர்தலில் முதல் முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்து ஒருவர் இறுதிச் சுற்று வரை முன்னேறியுள்ளார். அதோடு, இதுவரை நடைபெற்ற 5 சுற்றிலும் ரிஷி சுனக்கே முதலிடம் பிடித்துள்ளார்.
தேர்தல் முடிவு இருவரில் யாருக்கு வேண்டுமானாலும் சாதகமாக இருக்கலாம் என்றாலும், ரிஷி சுனக்கிற்கே வாய்ப்பு அதிகம் என கணிக்கப்படுகிறது.