சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டு பத்திரமாக மீட்கப்பட்ட இந்தியர்கள் தங்களை மீட்ட இந்திய கடற்படையினருக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் கடற்பகுதியில் லைபீரியா நாட்டைச் சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று சோமாலிய கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. இந்த கப்பலில் 15 இந்திய மாலுமிகள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து, இந்திய கடற்படையினர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு, கப்பலில் சிக்கியுள்ளவர்களை கடற்கொள்ளையர்களிடம் இருந்து மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதையும் படியுங்கள் : இசையால் ரசிகர்களை கட்டிப்போட்ட புயல் – ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் இன்று.!
இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். சென்னை கப்பல் சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலை நெருங்கியது. கப்பலை விட்டு கொள்ளையர்கள் வெளியேற ஹெலிகாப்டர் மூலம் இந்திய கடற்படையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், இந்திய கடற்படை கப்பலுக்குள் நுழைந்து கடத்தப்பட்ட இந்தியர்களை பத்திரமாக மீட்டனர். கொள்ளையர்கள் தப்பியோடினர். கப்பலில் இருந்த 15 இந்தியர்கள், 6 பிலிப்பைன்ச் நாட்டைச் சேர்ந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். முழுமையான சோதனைக்குப் பிறகு கப்பல் புறப்பட்டது என இந்திய கடற்படை தெரிவித்தது.
அதனைத்தொடர்ந்து, சோமாலிய கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட பத்திரமாக மீட்கப்பட்ட இந்திய கடற்படை கப்பலில் இருந்த இந்தியர்கள் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், தங்களை பத்திரமாக மீட்ட இந்திய கடற்படையினருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.







