பத்திரப்பதிவு அலுவலகங்களில் முறைகேடு நடப்பதாக புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு தளர்வு காரணமாக பத்திரப்பதிவு அலுவலகங்களில் 50 சதவீத டோக்கன்களுக்கே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரை தெற்கு வாசல் பகுதியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் பி. மூர்த்தி அலுவலகங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “இடைத்தரகர்கள் இல்லாமல் உரிய கட்டணம் பெற்று பத்திரப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது துறைவாரியாக நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை விரைவில் அமைக்கப்படும்.
பத்திரப்பதிவு அலுவலகங்களில் முறைகேடுகள் நடைபெறும் பட்சத்தில் அதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பத்திரப்பதிவு அலுவலகமாக இருந்தாலும் சரி வணிக வரித்துறையின் கீழ்வரும் அலுவலகங்களில் முறைகேடு குறித்த புகார் தெரிவிக்கப்பட்டால் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என அமைச்சர் பி.மூர்த்தி கூறினார்.







