உலகம் முழுவதும் வாழும் மக்கள் அனைவரும், வருகிற 2025 ஆம் ஆண்டுக்குள், தாங்கள் உணவில் சேர்க்கும் உப்பின் விகிதத்தை 30% குறைத்துக்கொள்ள வேண்டுமென உலக சுகாதார நிறுவனம் அறிவுருத்தியுள்ளது.
உப்பில்லா பண்டம் குப்பையிலே..! இது பல மொழி என்றாலும், நம் வாழ்க்கைக்கு, குறிப்பாக நாம் உண்ணும் உணவிற்கு பொருந்திய ஒன்று. உப்பு சேர்க்காமல் உணவின் அசல் சுவையே தெரியாது. அதே போல, அதிக உப்பு சேர்த்தாலும் சாப்பிட முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவில் உப்பு சேர்க்க வேண்டும். இது தான் சரியான அளவு என்பதை எதை வைத்தும் அளவிட முடியாது. அந்த அளவிற்கு நாம் உண்ணும் உணவில் மிக முக்கிய பங்கு வகிப்பது உப்புதான்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்படிப்பட்ட உப்பை எந்த அளவில் உணவில் சேர்க்க வேண்டும் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதே நேரம் அளவுக்கதிகமான உப்பை உணவில் சேர்ப்பதால் ஏற்படும் பிரச்சனைக்கள் குறித்தும் நாம் ஆராய்வதும் இல்லை.
இப்படிப்பட்ட நிலையில் தான், முதல் முறையாக உலக சுகாதார நிறுவனம் நாம் உணவில் சேர்க்கும் உப்பின் விகிதத்தை 30% குறைத்துக்கொள்ள வேண்டுமென ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், உடலுக்கு மிகவும் தேவையான அடிப்படை ஊட்டச்சத்தாக விளங்கும் சோடியம் எனப்படும் உப்பு சற்று அதிகரித்தாலும் இதய நோய், பக்கவாதம், ஆயுள் காலம் குறைவது போன்ற பிரச்சனைகள் நேரிடுவதாக எச்சரித்துள்ளது.
அதாவது ஒருவர் ஒரு நாளைக்கு சராசரியாக 10.8 கிராம் உப்பை உட்கொள்கின்றனர். இது உலக சுகாதார நிருவனம் அறிவுருத்தும் அளவான 5 கிராமை விட இரண்டு மடங்கு அதிகமாதனதாகும். அதாவது ஒரு டீஸ்பூன் உப்பு அதிகமாக நாம் உட்கொள்கிறோம். உணவு பொருட்கள் ஏற்படுத்தும் பல நோய்களில் சோடியம் ஏற்படுத்தும் தாக்கம் மிகக்கொடுமையானது. இதனால் இரத்த அழுத்தம், உடல் பருமன், இதயம் தொடர்பான நோய்கள் உள்ளிட்ட பலநோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகளில் 5 சதவிகிதம் மட்டுமே கட்டாய மற்றும் விரிவான சோடியம் குறைப்பு கொள்கைகளால் பாதுகாக்கப்படுகிறது எனவும் 73 சதவிகித நாடுகள் அத்தகைய கொள்கைகளை முழுமையாக செயல்படுத்த செயல்படுத்தவில்லை எனவும் அந்த அறிக்கை சுட்டுக்காட்டுகிறது. அதே சமயம் பொட்டலமிடப்பட்ட உணவுகளில் சோடியம் இருப்பதை இந்தியா கட்டாயமாக அறிவிக்க வேண்டும் என்பதை தவிர வேறு எந்த கட்டாய நடவடிக்கையும் இல்லை இந்தியா மேற்கொள்ளவில்லை என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
இதனால் சோடியத்தை அதாவது உணவில் உப்பை குறைத்து சாப்பிடும் முறையை நாம் சரியாக கையாண்டால் வருகிற 2030 -ஆம் ஆண்டில் 70 லட்சம் மக்களின் உயிர்கள் காப்பாற்றப்படும் என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. தொற்று நோய் அல்லாத நோய்களால் மக்கள் இறப்பதை குறைக்கும் விதமாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உப்பை குறைப்பது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், உப்பு ஏற்படுத்தும் பாதிப்புகள் தொடர்பாக பல்வேறு ஆவணங்களை உலக சுகாதார நிறுவனம் இணைத்துள்ளது.
நாம் உணவில் எப்படி உப்பின் அளவை குறைத்துக்கொள்ளலாம்?
- பொதுவாக சமைக்கும் போது பாதியளவு உப்பு சேர்த்து, சமைத்து சாப்பிடுவதை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.
- எக்காரணம் கொண்டும் சாப்பிடும் மேஜை மீது உப்பு ஜாடியை வைத்துக் கொள்ள வேண்டாம்.
- உப்பு குறைவாக இருந்தாலும் அதனை அபப்டியே சாப்பிட பழக வேண்டும்.
- உப்பு அதிகமாக சேர்த்து பொட்டலம் செய்யப்பட்ட உணவுகளை அறவே ஒதுக்கி விட வேண்டும்.
- உப்பு சேர்த்து செய்யும் ஊறுகாய் உள்ளிட்டவற்றை அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும் .
எது எப்படியோ, முடிந்தவரை உணவில் உப்பை குறைக்க முயற்சி செய்யுங்கள். உப்பு இல்லாமல் சிலவற்றை சாப்பிட முயலுங்கள். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதற்கு ஏற்ப உலக சுகாதார நிறுவனம் சொல்லும் விதிமுறைகளை பின்பற்றுங்கள்.
- பி.ஜேம்ஸ் லிசா