அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு; விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.  சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குத் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கடந்த ஜூன்…

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குத் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி அடையாறு பகுதியில் உள்ள அவரது வீட்டில் விசாரணை நடத்திய பிறகு நள்ளிரவில் கைது செய்தனர்.
அப்போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால், ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு இருதய பைபாஸ் அறுவை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். நீதிபதி நிஷாபானு மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் இந்த வழக்கு 3-வது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த மனு மீதான விசாரணை மூன்றாவது நீதிபதி சி.வி.காா்த்திகேயன் முன்பு நடைபெற்றது. கடந்த திங்கள் கிழமை வழக்கு நடைபெற்று ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று விசாரணை நடைபெற்ற  நிலையில், இருதரப்பினரும் வாதங்களை முன்வைத்தனர்.

செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதங்களை முன்வைத்தார்.இதேபோன்று அமலாக்கத் துறை தரப்பில் வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதங்களை முன்வைத்து நிறைவு செய்தார்.

இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வரும் 14ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.