முதலமைச்சர் குறித்து அண்ணாமலை, அவதூறாக பேசுவதாகவும், அவரிடம் ரூ.100 கோடி ரூபாய் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டிற்கான முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றுள்ள நிலையில், அவர் மீது அவதூறு பரப்பும் வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசி வருவதாகவும், இதற்காக 100 கோடி ரூபாய் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார். 24 மணி நேரத்திற்குள் அண்ணாமலை மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் எனவும் ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டார்.
இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாட்டின் நீதித்துறை மீது தனக்கு முழு நம்பிக்கை உள்ளது எனவும், திமுகவினரின் அச்சுறுத்தலை நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ்நாட்டிற்கான தனது போராட்டம், மக்கள் துணையுடன் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.







