ரவிச்சந்திரனுக்கு 11வது முறையாக பரோல் நீட்டிப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு சிறைவாசி ரவிச்சந்திரனுக்கு 11வது முறையாக பரோலை நீட்டித்து சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.  முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், அருப்புக்கோட்டையை சேர்ந்த ரவிச்சந்திரன் கடந்த 1992-ம் ஆண்டு…

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு சிறைவாசி ரவிச்சந்திரனுக்கு 11வது முறையாக பரோலை நீட்டித்து சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், அருப்புக்கோட்டையை சேர்ந்த ரவிச்சந்திரன் கடந்த 1992-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தண்டனை பெற்று 30 ஆண்டுகளுக்கும்  மேலாக அவர் சிறையில் இருந்துவருகிறார்.

கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு அவரது தந்தை பொய்யாழி காலமானார். ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஸ்வரி தற்போது தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகில் உள்ள சூரப்பன்நாயக்கன்பட்டியில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் தனது வேளாண் நிலத்தை பராமரிக்கவும், வலது கண்ணில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதால் தனக்கு உதவியாக இருக்கவும் தனது மகன் ரவிச்சந்திரனுக்கு சிறை விடுப்பு வழங்க கோரி அவரது தாயார் ராஜேஸ்வரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். நீதிமன்றம் அளித்த பரிசீலனையின் அடிப்படையில் தமிழக உள்துறை ரவிச்சந்திரனுக்கு கடந்த நவம்பர் 17ஆம் தேதி முதல் 30 நாட்கள் பரோல் வழங்கியது.

இதனையடுத்து மதுரை மத்திய சிறையிலிருந்து பரோலில் விடுவிக்கப்பட்ட ரவிச்சந்திரன் காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் தூத்துக்குடியில் தனது தாயார் வசிக்ககூடிய சூரப்பன்நாயக்கன்பட்டி கிராமத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

இந்நிலையில் ரவிச்சந்திரனின் தாயார் கோரிக்கையை ஏற்று ரவிச்சந்திரனுக்கு அடுத்தடுத்து பரோல் நீட்டிப்பை தமிழ்நாடு அரசு வழங்கியது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் 10 முறை பரோல் நீட்டிப்பு செய்த நிலையில் நாளை பரோல் காலம் முடிவடையவுள்ள நிலையில் இன்று 11 வது முறையாக ரவிச்சந்திரனுக்கு பரோல் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு மேலும் ஒரு மாதம் அதாவது வரும் அக்டோபர் 13 ஆம் தேதி வரை பரோல் நீட்டிப்பு அளித்து சிறை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.