துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 89 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 89 லட்சத்தி 11 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 989 கிராம் தங்கம், பறிமுதல் வாலிபர் கைது செய்யப்பட்டார். சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும்…

துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 89 லட்சத்தி 11 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 989 கிராம் தங்கம், பறிமுதல் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் மேத்யூ ஜோல்லிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை கண்காணித்தனர்.

அப்போது துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த அஸ்பக் உசேன்(30) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.

அப்போது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததைக் கண்டு பிடித்தனர்.
அவரிடம் இருந்து ரூ. 55 லட்சத்தி 96 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 249 கிராம் தங்கத்தை கைப்பற்றினார். அதுப்போல் துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணிகள் சென்ற பின் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது விமானத்தில் உள்ள கழிவறையில் ஒரு பார்சலில் தங்கம் இருந்ததை கண்டனர். ரூ. 33 லட்சத்தி 15 ஆயிரம் மதிப்புள்ள 740 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

இந்நிலையில் விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் ரூ. 89 லட்சத்தி 11 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 989 கிராம் தங்கம் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.