உத்தரப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமையில் இருந்து உயிர்பிழைத்த சிறுமி, இருதரப்பு பெற்றோரின் சமரசப் பேச்சுவார்த்தையால் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து, அந்த இளைஞரின் பெற்றோர், கிராமத்தில் உள்ள முக்கியப் பிரமுகர்களை அழைத்துக் கொண்டு அந்த சிறுமியின் வீட்டுக்கு சமாதானம் பேசுவதற்காக வியாழக்கிழமை இரவு சென்றுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதில், சிறுமியின் பெற்றோரிடம் சிறுமிக்கு திருமண வயது ஆன பின்னர் அந்த இளைஞரே அவரைத் திருமணம் செய்து கொள்வதாகவும், அதுவரை அந்த இளைஞரின் மீது எந்தவொரு வழக்கும் கொடுத்துவிடக் கூடாது என்றும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இப்பேச்சுவார்த்தை குறித்து அறிந்த சிறுமி, அதற்கு அடுத்த அறையிலேயே தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இச்சம்பம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, சிறுமியின் அண்ணன் கூறுகையில், மே 22ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் என் தங்கையை பக்கத்து வீட்டு இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அன்றைய தினத்தில் இருந்தே அவள் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தாள். எனது பெற்றோர் அந்த இளைஞர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என்றே அவள் நினைத்தாள். ஆனால், அவர்கள் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்ததைக் கேட்டவுடன் மிகவும் அதிர்ச்சியடைந்தாள். அவளால் அந்த அவமானத்தைத் தாங்க முடியவில்லை. அதனால், தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டாள் என்றார்.
இதுகுறித்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சன்சார் சிங் கூறுகையில், குற்றம்சாட்டப்பட்ட இளைஞர் தனக்கு 17 வயது என்று கூறுகிறார். அவருடைய வயது சரியானதுதானா என அவரது பதிவுகளை சரிபார்த்து வருகிறோம். அவர் மீது ஐபிசி 376 (வன்கொடுமை), 306 (உயிரிழப்புக்குத் தூண்டுதல்) மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளார். விரைவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வோம் என்றார்.