ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மத்தியப் பிரதேச அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும், ரஞ்சி கோப்பையை அந்த அணி முதல் முறையாக கைப்பற்றியது.
மும்பை அணி இதுவரை 41 முறை ரஞ்சி கோப்பையை வென்றுள்ளது. அத்தகைய வலிமையான அணியை மத்தியப் பிரதேசம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த பிப்ரவரி மாதம் 17ம் தேதி தொடங்கிய ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் அருணாசலப் பிரதேசம், பீகார், மிஸோரம், டெல்லி, தமிழ்நாடு, பெங்கால், பரோடா உள்ளிட்ட பல அணிகள் பங்கேற்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
குழு பிரிவில் பல்வேறு ஆட்டங்கள் நடந்தன. இதில், அரையிறுதிக்கு மத்தியப் பிரதேசம், பெங்கால், மும்பை, உத்தரப் பிரதேசம் ஆகிய அணிகள் முன்னேறின.
அரையிறுதி முடிவில் இறுதி ஆட்டத்திற்கு மும்பையும், மத்தியப் பிரதேசமும் முன்னேறின.
கடந்த 22ம் தேதி கர்நாடக மாநிலம், பெங்களூரில் தொடங்கிய இறுதி ஆட்டத்தில் மும்பை அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதல் இன்னிங்சில் மும்பை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 374 ரன்களை குவித்தது. சர்ஃபராஸ் கான் 134 ரன்கள் குவித்தார். ஜெய்ஸ்வால் 78 ரன்களும், கேப்டன் பிருத்வி ஷா 47 ரன்களும் பதிவு செய்தனர்.
இதையடுத்து, தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 536 ரன்களை மத்தியப் பிரதேசம் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் யஷ் துபே 133 ரன்களும், சுபம் சர்மா 116 ரன்களும், ரஜத் படிதார் 122 ரன்களும் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்துவதற்கு காரணமாகத் திகழ்ந்தனர்.
இதையடுத்து, 162 ரன்கள் பின்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது மும்பை. அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து அந்த அணியால் 269 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
சுவேத் பர்கர் மட்டும் அரை சதம் பதிவு செய்தார். 108 ரன்கள் எடுத்தால் வென்ற எளிய இலக்குடன் களம் கண்ட மத்தியப் பிரதேசம் 29.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி வெற்றி கண்டது. உள்ளூர் கிரிக்கெட்டில் முன்னணியில் உள்ள ரஞ்சி கோப்பை வரலாற்றில் முதல் முறையாக மத்தியப் பிரதேச அணி கோப்பையை பெற்றது. ஆட்டநாயகனாக சுபம் சர்மா தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகனாக சர்ஃபராஸ் கான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
-மணிகண்டன்