ஜெயிலர் படப்பிடிப்பிற்காக கேரளா சென்ற ரஜினி..!

ஜெயிலர் இறுதிக் கட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேரள மாநிலம் கொச்சிக்கு சென்றுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169-வது திரைப்படத்தை, நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன்…

ஜெயிலர் இறுதிக் கட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேரள மாநிலம் கொச்சிக்கு சென்றுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169-வது திரைப்படத்தை, நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜெயிலர் எனப் பெயர் வைக்கப் பட்டுள்ளது. நெல்சனின் முந்தைய படங்களுக்கு இசையமைத்த அனிருத் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். ஏற்கனவே ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட, தர்பார் போன்ற படங்களுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இவ்விரு படங்களின் பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், அனிருந் இந்த படத்தில் என்ன செய்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த்துடன், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், சுனில், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் , நடிகை ஆத்மிகா, தமன்னா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. படத்தின் ஷூட்டிங் சென்னை, மங்களூரு என்று 100 நாட்களை கடந்தும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தில் ஓய்வுபெற்ற ஜெயிலராக, முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து வருகிறார். ரஜினியின் மனைவியாக ரம்யா கிருஷ்ணனும் , ஐபிஎஸ் அதிகாரியாக வசந்த் ரவியும், தமன்னா மற்றும் சுனில் ஆகியோர் சினிமா நடிகர்களாகவும் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை 70 சதவீத படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இடம்பெறும் பெரும்பாலான காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன. சமீபத்தில் மங்களூருவில் ரஜினி – சிவராஜ்குமார் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்த நிலையில், இறுதி கட்டத்தை எட்டியுள்ள ஜெயிலர் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது. இதற்காக ரஜினி கேரளாவில் உள்ள கொச்சிக்கு விமானத்தில் சென்றுள்ளார். கொச்சி விமான நிலையம் சென்றடைந்த அவருக்கு, அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அவருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, மத்திய தொழில் பாதுகாப்பு அதிகாரிகள் ரஜினிகாந்தை அழைத்துச் சென்றனர். படப்பிடிப்பு முடிந்த பின்னர் ரஜினி சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.