பண மோசடி வழக்கில் ஜாமினில் வெளிவந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று காலை, விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3.10 கோடி மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது. இந்த மோசடியில் அதிமுகவினர் பலருக்கும் தொடர்பிருப்பதாகச் சொல்லப்பட்ட நிலையில் , விருதுநகர் குற்றப்பிரிவு போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் மேலும் 9 மோசடிப் புகார்கள் கூறப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் பண மோசடி வழக்கில் தான் கைது செய்யப்படாமலிருக்க உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுத் தாக்கல் செய்திருந்தார் ராஜேந்திர பாலாஜி. ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அவரது கைது உறுதி செய்யப்பட்ட நிலையில் திடீரென்று அவர் தலைமறைவானார். அவரை கைது செய்ய விருதுநகர் மாவட்ட எஸ்பி மனோஜ் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்துத் தேடத் தொடங்கினார்கள். கர்நாடகா, மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் அவர் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்பட்டது. மேலும் 3 தனிப்படைகள் அமைத்து அவர் தேடப்பட்ட நிலையில் கடந்த 5ம் தேதி ஓசூரில் அவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் ஜாமின் மனு விண்ணப்பித்திருந்த நிலையில். 4 வாரகால இடைக்கால ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம். இந்தக் கால இடைவெளியில் அவர் காவல் துறையினரின் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையையும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
அதனடிப்படையில் இன்று காலை விருதுநகர் குற்றப்பிரிவு போலீஸாரிடம் விசாரணைக்காக ஆஜரானார் ராஜேந்திர பாலாஜி.