“சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்துவது மக்களின் வாழ்வை சிரமப்படுத்தும்” – செல்வப்பெருந்தகை!

சுங்கச்சாவடி கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “நாளை முதல் தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருப்பது முற்றிலும் ஏற்க முடியாதது. ஏற்கனவே எரிபொருள் விலை உயர்வு, அவசியப் பொருட்கள் விலை ஏற்றம் போன்ற காரணங்களால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்துவது மக்களின் வாழ்வை மேலும் சிரமப்படுத்துவதாகும்.

சாலைகளில் தரமற்ற பணிகள், பராமரிப்பு குறைபாடு, நீண்ட காலமாக முடியாமல் உள்ள பாலங்கள் மற்றும் சேவைச் சாலைகள் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்கள் செலுத்திய கட்டணத்திற்கே உரிய வசதி கிடைக்காமல் இருக்கும் நிலையில், கட்டணத்தை மேலும் உயர்த்துவது நேரடியாக மக்களை சுரண்டும் செயலாகும்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், சுங்கச்சாவடி கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் பெற மத்திய அரசை வலியுறுத்துகிறோம். இல்லையெனில் மக்கள் நலனுக்காக தமிழ்நாட்டில் பரவலான ஜனநாயக போராட்டங்களை நடத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.