கேரளாவில் இடுக்கி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், கனமழை காரணமாக 11 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கனமழை தொடர்ந்து வருகிறது. இடுக்கி, கோட்டயம்,
பத்தனம்திட்டா, எர்ணாகுளம், கோழிக்கோடு, பாலக்காடு, கொல்லம் திருச்சூர், ஆலப்புழா, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் மழை நீடிக்கிறது. இதன் காரணமாக அந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இடுக்கி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் தவிர மற்ற மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. கொல்லம் மற்றும் திருவனந்தபுரத்தில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக வடக்கஞ்சேரி, அரிப்பாலம், அடூர் மற்றும் ஆலப்புழா உள்ளிட்ட இடங்களில் 8 பேர் உயிரிழந்தனர்.
தொட்டப்பள்ளி ஸ்பில்வே அருகே கனமழை மற்றும் பலத்த காற்றில் நாட்டுப்படகு கவிழ்ந்ததில் காணாமல் போன புலம்பெயர்ந்த தொழிலாளியின் சடலம் நேற்று மீட்கப்பட்டது. இந்நிலையில், நேற்று மலப்புரம் அமரம்பலத்தில் பெண் மற்றும் அவரது பேரக்குழந்தை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.திருச்சூரில் உள்ள இரிஞ்சாலக்குடாவில் திடீர் சூறாவளி தாக்கியதில் பரவலான சேதம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பல மரங்கள் வேரோடு சாய்ந்து மின் கம்பிகள் அறுந்து விழுந்தன.பெரியாறு, முத்திரப்புழா ஆற்றின் கரையோரங்களில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 8 ஆம் தேதி வரை மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்புபணிகளை கேரள அரசு முடுக்கிவிட்டுள்ளது.






