ரயில்கள் மீது கால்நடைகள் மோதி விபத்து ஏற்படுவதை தடுக்க ரயில்வே பாதைகளின் அருகே 1000 கிலோ மீட்டர் தூரத்திற்கு தடுப்புச் சுவர்களை எழுப்ப ரயில்வேத்துறை திட்டமிட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்தின் முதல் 9 நாட்களில் மட்டும் கால்நடைகள் குறுக்கே பாய்ந்ததால் 200 ரயில்களின் பயணங்களில் பாதிப்பு மற்றும் விபத்துக்கள் போன்றவை நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த ஆண்டு இதுவரை 4000 சம்பவங்கள் இதுபோன்று நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் கால்நடைகள் குறுக்கே பாய்ந்ததால் வந்தே பாரத் ரயில்களும் விபத்துக்குள்ளாகின.
இந்நிலையில் இது போன்ற விபத்துக்களை தடுக்க ரயில்வே பாதையின் அருகே தடுப்புச்சுவர்களை அமைக்க ரயில்வேத்துறை திட்டமிட்டுள்ளதாக அத்துறையின் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இரண்டுவிதமான வடிவங்களில் சுவர்கள் அமைக்கப்பட உள்ளதாகக் கூறிய அவர், முதல் வகை சுவர் திட்டத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். தகுந்த இடங்களில் 1000 கி.மீ தூரத்திற்கு முதற்கட்டமாக சுவர் எழுப்ப ரயில்வேத்துறை திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
வடக்கு மத்திய ரயில்வே வழித்தடங்களில்தான் ரயில்பாதைகளில் கால்நடைகள் குறுக்கே பாயும் சம்பவங்கள் அதிக அளவு நடைபெறுதாக கூறப்படுகிறது.







