உதவித்தொகையுடன் அமெரிக்காவில் உயர்கல்வி பயில்வதற்கான திட்டத்தை க்வாட் கூட்டமைப்பு தொடங்கியுள்ளது.
அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகளின் கூட்டமைப்பான க்வாட் அமைப்பின் மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று நடைபெற்றது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் கிஷிடோ, ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த மாநாட்டை ஒட்டி, அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் உதவித்தொகையுடன் அமெரிக்காவில் உயர்கல்வி பயில்வதற்கான திட்டம் தொடங்கப்பட்டது. உயர்கல்வி பயில்வதற்கான விண்ணப்பத்தையும் தலைவர்கள் வெளியிட்டனர்.
இந்த விண்ணப்பத்தின் கீழ் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளைச் சேர்ந்த தலா 100 மாணவர்கள் ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் அவ்வாறு ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்படும் 400 மாணவர்களுக்கு ஆண்டொன்றுக்கு தலா 100 அமெரிக்கன் டாலர் அதாவது சுமார் ரூ. 38.76 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய 4 துறைகளில் இளங்களை பட்டம் பெற்ற மாணவர்கள் அமெரிக்காவில் உயர்கல்வி பயில இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்களும் உயர் ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ள இந்த உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்ற தலைவர்களை உருவாக்கும் நோக்கிலான இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.