அரசியலில் துரோகம் செய்தவர்களுக்கு தண்டனை நிச்சம் கொடுத்தே தீர வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் சிவசேனா கட்சி தலைமையில் ஆட்சி நடைபெற்றது. முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 20ந்தேதி சிவசேனா கட்சி எம்எல்ஏக்கள் பலர் உத்தவ் தாக்ரேவிற்கு எதிராக களமிறங்கினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சிவசேனா கட்சியின் முக்கிய தலைவரும், அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் அணிதிரண்டு போர் கொடி தூக்கினர். இதனால் உத்தவ் தாக்கரே தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ்ஸூம் பதவியேற்று கொண்டனர்.
சிவசேனா கட்சியில் தற்போது பிளவு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்றும் கட்சியின் சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திடம் ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் முறையிட்டுள்ளனர்.
இத்தகைய அரசியல் சூழலில், மகாராஷ்டிர பாஜகவின் முக்கிய நிர்வாகிகளுடன் அமித்ஷா இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட உத்தவ் தாக்கரேவின் பேராசை தான் காரணம். அதுவே அவர் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தியது. மற்றபடி அதில் பாஜகவின் பங்கு எதுவுமே இல்லை. உத்தவ் தாக்கரே பாஜகவுக்கு மட்டுமல்ல, மகாராஷ்டிரத்திற்கும் துரோகம் செய்துள்ளார்.
உத்தவ் தாக்கரேவுக்கு முதலமைச்சர் பதவி தருவதாக நாங்கள் ஒருபோதும் வாக்கு கொடுக்கவில்லை. நாங்கள் எப்போதுமே வெளிப்படையாக அரசியல் செய்கிறோம். அரசியலில் துரோகம் செய்பவர்களுக்கு நிச்சயமாக தண்டனை கொடுத்தே ஆகவேண்டும். உத்தவ் தாக்கரேவுக்கு தக்க பாடம் புகட்டுவதற்கான தருணம் வந்துள்ளது. துரோகிகளை சகித்துக் கொள்ளும் பழக்கம் இருக்கக் கூடாது. அரசியலில் எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கலாம். ஆனால் துரோகத்தை பொறுத்துக் கொள்ள முடியாது. துரோகம் செய்பவர்களுக்கு கண்டிப்பாக தண்டிக்கபட்டே தீர வேண்டும் என்று அமித்ஷா தெரிவித்தார்.