பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார்.
பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று காலை வெளியிடப்பட்டது. தமிழகத்திலுள்ள 434 பொறியியல் கல்லூரிகளில், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. இதற்காக கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி முதல் ஜூலை 27ம் தேதி வரை மாணவர்கள் விண்ணபிக்கலாம் என உயர்க்கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி சுமார் 1.69 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்புகளுக்காக விண்ணப்பித்திருந்தனர்.
தரவரிசை பட்டியல் வெளியீடு
இந்த இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று காலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். வரும் 20ஆம் தேதி முதல் 23ம் தேதி வரை அரசுப் பள்ளி மாணவர்கள், விளையாட்டு பிரிவு மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள், முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் ஆகியோருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு, வரும் 25ம் தேதி தொடங்கி, அக்டோபர் மாதம் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாணவர்கள் http://www.tneaonline.org இணையதளத்தில் தரவரிசைப் பட்டியலை அறிந்து கொள்ளலாம் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
அமைச்சர் பேட்டி
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, 2022-23-ம் ஆண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் 36,000 பேர் கூடுதலாக விண்ணப்பித்து உள்ளனர். 1,69,080 பேர் கட்டணம் செலுத்தியுள்ளனர். கடந்த ஆண்டை விட 24,035 பேர் கூடுதலாக கட்டணம் செலுத்தியுள்ளனர்.
இதில் 1,58,157 பேருக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் 22,587 மாணவர்கள் தரவரிசையில் இடம்பெற்றுள்ளனர். 22,587 பேரும் அரசுப்பள்ளியில் படித்தவர்கள். இதில் 9,981 மாணவியர் மாதம் ரூ.1,000 பெற தகுதியானவர்கள். விளையாட்டுப் பிரிவின் கீழ் 1,258 பேர் தரவரிசையில் இடம் பெற்றுள்ளனர். முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் 970 பேர், மாற்றுத்திறனாளிகள் 203 பேர் தரவரிசையில் இடம்பெற்றுள்ளனர் என்று கூறினார்.
431 கல்லூரிகள்
தொடர்ந்து பேசிய அவர், இந்த ஆண்டில் 431 பொறியியல் கல்லூரிகள் கலந்தாய்வில் பங்கேற்க உள்ளன. அனைத்து கல்லூரிகளிலும் சேர்த்து 1,48,811 இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக உள்ளன. 7.5% இட ஒதுக்கீட்டில் 10,968 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. அண்ணா பல்கலைக்கழக வளாகக் கல்லூரிகள் உட்பட அனைத்து கல்லூரிகளிலும், தொழிற்கல்வி பாடப்பிரிவுக்கு 2% இட ஒதுக்கீட்டின் கீழ் 175 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 10,12-ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது என்றார்.
மேலும், தரவரிசைப் பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தாலோ, வேறு குறைகள் இருந்தாலோ, இன்று முதல் வரும் 19-ம் தேதிக்குள் TNEA Seva Centre-ல் குறைகளை பதிவு செய்யலாம். குறைகள் நியாயமாக இருப்பின், உடனடியாக நிவர்த்தி செய்யப்படும். 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்காத அரசுப்பள்ளி மாணவர்கள் வரும் 19-ம் தேதிக்குள் தங்கள் பெயரை இணைத்துக்கொள்ளலாம். மேலும் 18004250110 என்ற எண்ணுக்கு அழைத்து குறைகளை தெரிவிக்கலாம் என்று கூறினார்.
முதல் 10 இடங்கள்
பொறியியல் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களை பெற்ற மாணவர்களின் விவரம் வருமாறு:
1. ரஞ்சிதா, SNSM HSS,கொல்லம்
2. ஹரிணிகா, அவ்வை MHS, தருமபுரி
3. லோகேஷ் கண்ணன், வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, திருவள்ளூர்
4. அஜய், கோவை
5. கோபி, புதுக்கோட்டை
6. பார்த்திக்ஷா, கோவை
7. பவித்ரா, பம்மல், சென்னை
8. ஹரிகுரு, ராசிபுரம்
9. மதுபாக்கியம், செங்கல்பட்டு
10. சாருகேஷ், மதுரை ஆகியோர் முதல் 10 இடங்களை பெற்றுள்ளனர்.









