3 நாட்களில் பொதுத்தேர்வு தொடங்கும் நிலையில் வீட்டுக்கு மின் இணைப்பு கேட்டு
மாவட்ட ஆட்சியரிடம் 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் மனு அளித்துள்ளார்.
நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள எரவாஞ்சேரி ஓ.என்.ஜி.சி. தெருவை
சேர்ந்தவர் சிவானந்தம். விவசாய கூலி தொழிலாளியான இவருக்கு மனைவி ராஜலட்சுமி மற்றும் மகள்கள் ராஜேஸ்வரி(வயது 18), விக்டோரியா(15) ஆகியோர் உள்ளனர்.
2-வது மகள் விக்டோரியா மருங்கூரில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு தனது பெற்றோருடன் வந்து அவர் இன்று மனு ஒன்றை அளித்தார்.
மாணவியின் பெற்றோர் திருவாரூர் மாவட்டம் வைப்பூர் அருகே சோழங்கநல்லூர் பகுதியில் வசித்து வந்தனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு எரவாஞ்சேரியில் இடத்தை விலைக்கு வாங்கி புதிதாக வீடு கட்டி வசித்து வருவதாகவும் மின் இணைப்பு இல்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வீட்டுக்கு மின் இணைப்பு கேட்டு விண்ணப்பம் கொடுத்து 10 ஆண்டுகளாகி விட்டதாகவும் ஆனால் இதுநாள் வரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை எனவும் தான் தற்போது 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுத தயாராகி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘உங்கள் வீட்டிற்கு மின் இணைப்பு கொடுக்க புதிதாக 2 மின்கம்பங்கள் நட வேண்டும். அதற்கு மின்வாரிய அலுவலகத்திற்கு டெபாசிட் தொகையாக ரூ.14 ஆயிரம் கட்ட வேண்டும்’ என கூறினார்கள். அந்த அளவிற்கு டெபாசிட் தொகை கட்ட எனது தந்தையிடம் வசதி இல்லை. டெபாசிட் தொகையை ஊராட்சி அலுவலகம் வாயிலாக கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
மின் வசதியின்றி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு பாடங்களை படிப்பதற்கும் சிரமமாக
உள்ளதாகவும் எனவே மின் இணைப்பு வழங்கி உதவி செய்ய வேண்டும் என விக்டோரியா
கேட்டுக் கொண்டுள்ளார். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க இன்னும் 3 நாட்களே
உள்ள நிலையில் மாணவி ஒருவர் மின் இணைப்பு கேட்டு நாகப்பட்டினம் மாவட்ட
ஆட்சியர் அருண் தம்புராஜிடம் மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.







