கொல்லம் எக்ஸ்பிரஸ் இரயில் சிவகாசியில் நிறுத்தப்படாததால் செப்-22 ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என எம்.பி.மாணிக்கம் தாகூர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொல்லம் விரைவு இரயில் சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் வரை இயக்கப்படுகிறது. இந்த இரயில் திருச்சி, மதுரை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுதூர், சங்கரன்கோவில், தென்காசி வழியாக கேரளம் சென்றடைகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு வரை சிவகாசி ரயில் நிலையத்தில் இந்த இரயில் நிறுத்தப்பட்டது, அதன் பிறகு சிவகாசி ரயில் நிலையத்தில் கொல்லம் விரைவு இரயில் நிறுத்தப்படுவதில்லை.
இதுகுறித்து விருதுநகர் எம்.பி மாணிக்கதாகூர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, மோடி அரசு தொடர்ந்து தென் தமிழகத்தை புறக்கணித்து வருகிறது. முன்னேற துடிக்கும் மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டம் இருந்த போதும் இங்குள்ள பட்டாசு, தீப்பெட்டி தொழில் வளர்ச்சிக்கு மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட சிவகாசியில், சென்னையில் இருந்து கொல்லம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நிற்பது இல்லை. இதுதொடர்பாக பல முறை இரயில்வே துறை அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், கொல்லம் எக்ஸ்பிரஸ் இரயிலை மறித்து செப்டம்பர் 22 ம் தேதியில் சிவகாசியில் போராட்டம் நடத்தபடும்
என மாணிக்கம் தாகூர் கூறினார்.







