உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள மாநில நிதி ஆணையத்தின் கீழ் 752 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்காக அடிப்படை மானியமாக மாநில நிதி ஆணையத்தின் பரிந்துரையின் படி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் நடப்பு ஆண்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5,080 கோடி ரூபாயில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கு மட்டும் 752 கோடி ரூபாய் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகளுக்காக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளில் பல்வேறு அடிப்படை வசதிகள் இதன் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளன என அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.
கிராம ஊராட்சிகளுக்கு 424 கோடி ரூபாயும், ஊராட்சி ஒன்றியங்களுக்கு 270 கோடி ரூபாயும், மாவட்ட ஊராட்சிகளுக்கு 50 கோடி ரூபாயும் ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான நிதி, தடையற்ற குடிநீர், மழைநீர் சேகரிப்பு திட்டங்கள் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கு நிதி, புதிய கழிவறைகள் கட்டுதல், நூலகங்களை ஏற்படுத்துதல், அங்கன்வாடி மையங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், ஊரக பகுதிகளில் உள்ள பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துதல், தெருவிளக்குகள், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தலும் இந்த நிதியின் கீழ் நடைபெறும் என்றும் தமிழ்நாடு அரசு குறிப்பிட்டுள்ளது.
– இரா.நம்பிராஜன்