மதுரையில் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் காலணி அணிந்து வர தடை விதிக்கப்பட்டதற்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மகாத்மா பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதி முடித்து விட்டு, தகிக்கும் தார் சாலையில் காலணி அணியாமல் மாணவ, மாணவியர் துடித்துக் கொண்டு சென்ற காட்சி காண்போரை கவலைகொள்ளச் செய்ததாகக் கூறியுள்ளார்.
முறைகேடுகளை தடுக்க தேர்வு அறைக்குள் காலணிகள் அணிந்து வரக்கூடாது என்பது தான் அரசின் கட்டுப்பாடு எனக் கூறியுள்ள அன்புமணி ராமதாஸ், சில தனியார் பள்ளி நிர்வாகங்கள் தேர்வு மையத்திற்கு அடுத்த தெருவில் வாகனங்களை நிறுத்தி விட்டு, வெறும் காலுடன் மாணவர்களை தேர்வு மையத்திற்கு அனுப்பியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரை மகாத்மா பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் +2 தேர்வு எழுதி முடித்து விட்டு, தகிக்கும் தார்சாலையில், காலணி அணியாமல் மாணவ, மாணவியர் துடித்துக் கொண்டு வந்த காட்சி காண்போர் அனைவரையும் கவலைகொள்ளச் செய்தது. பள்ளி நிர்வாகத்தின் புரிதலின்மையே இதற்குக் காரணம்!(1/4) pic.twitter.com/Q0ISz5FKXB
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) May 5, 2022
மேலும், மதுரையில் 40 செல்சியஸ் அளவில் வெயில் கொதிக்கும் நிலையில், மாணவர்கள் வெறுங்காலுடன் நடந்தால் பாதங்களில் பாதிப்பு ஏற்பட்டு தேர்வு எழுத முடியாத நிலை ஏற்படலாம். பள்ளி நிர்வாகங்கள் விதிகளை சரியாக புரிந்து செயல்படுத்த வேண்டும்! எனக் கூறியுள்ளார்.
தேர்வு அறையின் வாசல் வரை காலணி அணிந்து வர தடை கிடையாது என்பதால் மாணவர்கள் காலணி அணிந்து சாலைகளில் செல்வதை உறுதி செய்யும்படி பள்ளி நிர்வாகங்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.







