திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 1 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்டுள்ள பெற்றோர்களுக்கான பிரத்யேக தரிசன நடைமுறையை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
திருமலையில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய 1 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோர், மற்றவர்களுக்கு இலவச தரிசனம் பெரும்வகையில் திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்துவருகிறது. அதற்கு பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
அதன் நடைமுறைகள் பின்வருமாறு:
1 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்டுள்ள பெற்றோர் இந்த தரிசனத்திற்கு தகுதியானவர்கள். அவர்கள் ஆதார் அட்டை அல்லது குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் கட்டாயம் கொண்டு வர வேண்டும். குழந்தைகளின் பெற்றோர் மற்றும் குழந்தை உடன் பிறந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அவர்கள் அனைவரின் ஆதார் அட்டைகளையும் கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும். உறவினா்களுக்கு அனுமதி இல்லை.
இந்த தரிசனத்துக்கு தகுதியுள்ளவர்கள் நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை சுபதம் நுழைவாயிலில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். 1 மாதத்தில் ஒரு முறை மட்டுமே அவர்கள் இதுபோன்ற தரிசனம் பெற முடியும். தரிசனம் முடிக்க அவா்களுக்கு சுமார் 2 மணி நேரம் தேவைப்படும்.
தெற்கு மாட வீதியில் திருமலை நம்பி சந்நிதியை அடுத்து சுபதம் நுழைவாயில் உள்ளது. அவா்களுக்கு தரிசன டிக்கெட் அல்லது முன்பதிவு தேவையில்லை. நேரில் வந்தாலே போதும். இந்த தரிசனம் தினமும் உண்டு. சிறப்பு விழா நாள்கள், பக்தர்கள் கூட்டம் அதிகம் உள்ள நாள்களில் இந்த தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்யவும் வாய்ப்புள்ளது.
எனவே, 1 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் இவற்றைக் கவனத்தில் கொண்டு தங்களின் பயணத்தைத் தொடர வேண்டும்.







