பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரை விதிகளை மீறி அவர்களது உறவினர்களுடன் பேச அனுமதித்ததாக 7 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரி ராஜன், மணிவண்ணன், வசந்த் குமார் , சதீஷ், பாபு , ஹேரேன் பால், அருளானந்தம், அருண்குமார் ஆகியோர் வழக்கு விசாரணைக்காக நேற்று கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை வரும் 28ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து அவர்கள் சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். செல்லும் வழியில் அவர்களுடைய உறவினர்களுடன் பேச அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நீதிமன்றத்தில் முறையாக அனுமதி பெறாமல் விதிகளை மீறி இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் மேலெழுந்தன.
இந்நிலையில், இந்த சந்திப்புக்கு உடந்தையாக இருந்ததாக காவலர்கள்,
1) ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியம்.
2) Gr I 1921 பிரபு.
3) Gr I 588 வேல்குமார்.
4) PC 1961 ராஜ்குமார்.
5) PC 2010 நடராஜன்.
6)PC 2011 ராஜேஷ்குமார்.
7) Gr I 993 கார்த்தி.
ஆகியோரை சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்மல் ஹோதா IPS பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரை விதிகளை மீறி அவர்களது உறவினர்களுடன் பேச அனுமதித்ததாக 7 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.